பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய மூவரை போலீசார் கைதுசெய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பேருந்து நிலையத்தில், கடந்த வெள்ளிக் கிழமை இரவு சாலையில் நடுவே இருசக்கர வாகனத்தை நிறுத்தி, 4 இளைஞர்கள் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர். போக்குவரத்துக்கு இடையூறாக அவர்கள் கேக் வெட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியதால் பெரம்பலூரில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து, அரும்பாவூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். அப்போது, வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(24) என்பவர், தனது பிறந்த நாளையொட்டி அதே பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன்(20), பிரபாகரன் மற்றும் தொண்டப்பாடியை சேர்ந்த சூர்யா ஆகியோருடன் சாலையில் பட்டா கத்தியால் கேக் வெட்டியது தெரிய வந்தது.
இதனை அடுத்து, 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த அரும்பாவூர் போலீசார், ஹரிகிருஷ்ணன்(24), ஜனார்த்தனன் (20), சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.
தப்பியோடிய பிரபாகரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.




