சிறுமி இசாலினியின் மரணத்திற்கு நீதி கோரியும், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை கண்டித்தும் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
வவுனியா – மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (22) குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் கறுப்பு மாஸ்க் அணிந்தும், பதாதைகளை ஏந்தியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ‘வித்தியாவையடுத்து இசாலினியா, சிறுவர் துஸ்பிரயோகத்திற்கான முற்றுப்புள்னளி எப்போது, இணையவழி பாலியல் துஸ்பிரயோகங்களை நிறுத்து, இசாலினிக்கு நீதி வேண்டும், மானிடப் பண்புகள் எமது நாட்டில் மரணித்து விட்டதா’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்த போது, முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் அவர்களின் வீட்டில் குறைந்த வயதில் பணிபெண்ணாக வேலை செய்து மரணித்த இசாலினியின் மரணத்திற்கு நீதியான விசாரணை வேண்டும் எனவும், அந்த சிறுமியை வேலைக்கு அமர்த்தியர்கள், மரணத்திற்கு காரணமானவர்கள் எல்லோரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதியான விசாரணை வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களில் எமது நாட்டில் இடம்பெறாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.