வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டள்ளது.
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. இரத்நாயக்காவுடனான சந்திப்பின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் அமைச்சில் நேற்று(07.07.2021) இடம்பெற்ற சந்திப்பின்போது, வடக்கு மாகாணத்தில் தற்போது வனத்துறையினரினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில், யுத்தத்திற்கு முற்பட்ட காலப் பகுதியில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையினை அமைச்சர் டக்ளஸ் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அமைச்சர் சி.பி. இரத்நாயக்கவிற்கு தெளிவுபடுத்தினார்.
அத்துடன், குறித்த காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வடக்கு விவசாயிகள் ஆர்வமாக இருப்பதனையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தினையும் வலுப்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
மேலும். வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஏற்றுமதித் தரத்திலான நண்டு, இறால், மீன் வளர்ப்பு பண்ணைகளை உருவாக்கி நீர்வேளாண்மையை விருத்தி செய்வது தொடர்பிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது குறித்த அமைச்சருடன் கலந்தாலோசித்தார்.
இதன்போது ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்த அமைச்சர் டக்டளஸ் தேவானந்தா அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் நீர்வேளாண்மை பண்ணைகளை அமைப்பதற்கு பொருத்தமான இடங்களை விடுவித்து பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




