பிலிப்பைன்ஸில் விமான விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் சாகயான் டி ஓரோ நகரிலிருந்து சுலு மாகாணத்தில் உள்ள மலைப்பகுதி நகரான பதிகுல் என்ற நகர் அருகே இருக்கும் பங்கால் கிராமத்திற்கு ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்ட சென்ற C-130 ரக விமானம் கடந்த 4ம் தேதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் விமானிகள் 3 பேர், 5 ஊழியர்கள் உட்பட 92 பேர் இருந்துள்ளனர். விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 50 பேராக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ராணுவ ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா தெரிவித்துள்ளார்.
இதனிடையே விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றன. இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து கருப்பு பெட்டியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இது விமானம் எப்படி விபத்தில் சிக்கியது என்பதை அறிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும் என விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானி C-130 ரக விமானம் இயக்குவதில் பல வருடம் அனுபவம் பெற்றவர் என தெரியவந்துள்ளது. அத்துடன், உயிர்பிழைத்தவர்களிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு இரண்டு, மூன்று முறை வானத்தில் இடது, வலது புறமாக நிலை தடுமாறி பறந்துள்ளது. அதை கட்டுப்படுத்துவதற்கு விமானி முயன்றார். இருப்பினும் அது மிக தாமதமான முயற்சியாக இருந்தது என அவர்கள் தெரிவித்தனர்.