கொரானா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பை சென்னைக்கு மாற்ற நடிகர் சூர்யா, படக்குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40வது படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு விரைவில் இறுதிக்கட்டத்தை நெருங்கவுள்ளது. இந்நிலையில் கொரானா அச்சுறுத்தல் இன்னும் நீங்காமல் இருந்து வருகிறது. இதனால் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழுவினருக்கு சூர்யா அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து விரைவில் இந்த படப்பிடிப்பு சென்னையில் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை முடித்து ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேலின் அடுத்த படத்தில் வழக்கறிஞராக கவுரவ வேடத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களை முடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.




