ஆபாசமாக பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பப்ஜி விளையாட்டை யூடியூபில் ஒன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பணம் சம்பாதித்துவந்த யூடியூபர் மதன், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசுவதாக சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் பொலீசாரிடம் 150க்கும் மேற்பட்டோர் புகாரளித்தனர். கேம் சொல்லி கொடுப்பதாகக் கூறி மதன் லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் மதன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த பொலீசார் தர்மபுரியில் தலைமறைவாக இருந்த அவரை ஜூன் 18-ஆம் திகதி கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார்.
மனைவிக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், பெண்களை துன்புறுத்தியது உள்ளிட்ட தனக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை எனக்கோரி மதன் ஜாமீன் மனு விண்ணப்பித்திருந்தார்.இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘விசாரணை முழுமையாக முடிவடையவில்லை. பல நபர்களிடம் மதன் மோசடி செய்துள்ளார். அதனை முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்கினால் விசாரணையில் பாதிப்பையும், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது’ என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.



