யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தலைமையகத்தினால் கனிமப்பசளை உற்பத்தி செய்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
வலி வடக்கில் பொதுமக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதியிலேயே சேதன பசளை உற்பத்தி ஆர்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்-
நச்சுத்தன்மையற்ற விவசாயத்தினை கட்டியெழுப்பும் நேக்கத்துடன்
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற கனிமப்பசளை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பாதுகாப்பப் படைகளின் பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின்
ஆலோசனைக்கு அமைவாகவும் யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் பலாலி பகுதியில் அமைந்துள்ள விவசாயப் பண்ணையினை மையமாகக் கொண்டு கனிமப் பசளை உற்பத்தி செய்கையானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த செயற்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வானது யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் 2021 ஆடி மாதம் 04 அன்று நடைபெற்றதுடன் நாட்டின் தேசிய உரங்கள் உற்பத்திக்கு 3600 மெட்றிக்தொன் கனிமப் பசளை வழங்குவற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் அத்திட்டத்தின் ஓரு பகுதியாக கனிமப் பசளைப் பாவனையின் நன்மை தொடர்பாக சமூகத்திற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இதற்கேற்ப நாட்டிலுள்ள விவசாயிகள் தமக்குத் தேவையான கனிமப் பசளையினை தாமே உற்ப்பத்தி செய்வதற்கான நுட்பங்களிற்கான
ஒத்துழைப்பினை வழங்குவதே இராணுவத்தினரின் எதிர்பார்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.




