உணவுப்பொருட்கள் விநியோகத்தை நிறுத்தினால் நாட்டின் நிலைமை என்னவாகும்? மக்கள் எவ்வாறு அவதிப்படுவார்கள்? தொழில் நசித்துப் போகும் என்றாலும், ஏன் விநியோகம் நிறுத்தப்பட்டது?
இந்த வேலைநிறுத்தம் நடைபெறுவது பாகிஸ்தானில் தான். அந்நாட்டில் மாவு அரைக்கும் தொழில் தொடர்பான மூன்று வரிகளை உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூன் 30 முதல் மாவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மாவு ஆலைகள் சங்கம் (Pakistan Flour Mills Association) அறிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து மாவு ஆலைகளும் பொருட்களின் விநியோகத்தை நிறுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மாவு நெருக்கடி அதிகரிக்கும்.
“நாங்கள் நாளை முதல் மாவு வழங்குவதை நிறுத்திவிடுவோம், ஜூன் 30 முதல் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திவிடுவோம். அரசாங்கத்தின் அக்கறையற்ற அணுகுமுறை காரணமாக இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது” என்று மாவு ஆலைகள் சங்கத்தின் சிந்து மண்டலத் தலைவர் சவுத்ரி முஹம்மது யூசுப் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தார்.
மாவு ஆலைகளின் வருடாந்திர விற்பனையில் ஒரு சதவீத தள்ளுபடியை ரத்து செய்வதாக பாகிஸ்தான் மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய 2020-21 மத்திய பட்ஜெட்டில் (Budget 2020-21) அறிவித்த பின் இந்த வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தவிடு (bran) மீதான விற்பனை வரியை 10 சதவீதம், மாவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான விற்பனை வரி 7 சதவீதம் அதிகரிப்பதாக அரசு அறிவித்தது.
மேலும், விற்றுமுதல் வரியின் (turnover tax) அதிகரிப்பு 20 கிலோ பை ஒன்றுக்கு 30 ரூபாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிடு மீதான விற்பனை வரியும் இணைந்து 20 கிலோ மாவு பை ஒன்றின் விலை 67 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக PFMA தலைவர் அசிம் ராசா கடந்த வாரம், பாகிஸ்தான் நிதியமைச்சர் சவுகத் தரினுக்கு (Minister for Finance Shaukat Tarin) எழுதிய கடிதத்தில், வரி உயர்வு மத்திய அரசின் பிழை என்று விவரித்தார். மேலும், தற்போது இருக்கும் வருவாய் மற்றும் வரி விகிதத்தை பராமரிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.