COVID-19 தடுப்பூசி காரணமாக ஆண்களுக்கு பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுவதாக சமீபத்தில், மக்கள் மத்தியில் செய்தி உலாவி வரும் நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்களன்று (ஜூன் 21, 2021), மக்களுக்கு இது குறித்து மக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் ஒரு விளக்கத்தை வெளியிட்டது.
தற்போது பயன்பாட்டில் உள்ள கொரோனா வைரஸ் (Coronavirus) தடுப்பூசிகள் எதுவும் மலட்டுத் தன்மை எதுவும் ஏற்படுத்தாது எனவும், இது வெறும் கட்டுக்கதை எனவும் சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஏனெனில் அனைத்து தடுப்பூசிகளும் (Corona Vaccine) அவற்றின் கூறுகளும் முதலில் விலங்குகளிடம் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் மனிதர்களிடமும் பரிசோதனை செய்யப்படுவதால் அவை ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பது குறித்த ஆய்வுகள் முழுமையாக நடத்தப்படுகின்றன என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதி செய்யப்பட்ட பின்னரே அவற்றை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன” என்று அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில், சில ஊடக அறிக்கைகளில், சுகாதார பிரிவு ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்கள் மத்தியில் கூட இது குறித்த சந்தேகம் உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
“தடுப்பூசி போடும் பணி தொடங்கியதில் இருந்து, இதுபோன்ற தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் சமூகத்தில் பரவுவதைக் காண முடிந்தது. இதற்கு முன்னர் கூட, போலியோ மற்றும் தட்டம்மை-ரூபெல்லா போன்ற தடுப்பூசிகள் தொடர்பாக இது போல கூறப்பட்டது” என்று சுகாதார அமைச்சகம் (Health Ministry) மேலும் கூறியது.




