நாட்டிற்கும் மக்களுக்கும் நிறைவேற்ற வேண்டிய கடமையிருப்பதால் தேசியப்பட்டியல் நியமனத்தை ஏற்று, பாராளுமன்றத்திற்குத் திரும்புவதற்கு ஒப்புக் கொண்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசியப்பட்டியல் நியமனத்தை ஏற்கும்படி, கடந்த சில மாதங்களாக கட்சி கோரியதை பலமுறை நிராகரித்ததையும் உறுதிப்படுத்தினார்.
ரணில் விக்கிரமசிங்க தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்ட பின்னர ஊடகங்களுடன் பேசிய விக்ரமசிங்க, நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமை மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தில் மீண்டும் நுழைந்து தனது நிபுணத்துவத்தை வழங்க ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் மற்றும் தொற்றுநோய் அதிகரித்து வருவதாகவும், நெருக்கடியை சமாளிக்க அனைத்து பிரிவுகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் குறிப்பிட்டார்.
குறிப்பிட்டளவான தொற்றாளர்கள் மற்றும் இறப்புகள் அறிவிக்கப்படவில்லை.
எனவே, நாட்டின் கொரோனா வைரஸ் நெருக்கடி மக்கள் நம்புவதை விட பெரியதாக இருக்கும்.
முதலில் மக்களின் உயிரைக் காப்பாற்றும் திட்டத்தை நோக்கி அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசாங்கம் நாட்டின் மீதான தனது பிடியை இழந்து வருவதாகவும் அது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் கூறினார்.
கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாட்டிற்கு அரசியல் ஸ்திரத்தன்மை தேவை என்று முன்னாள் பிரதமர் கூறினார்.
பாராளுமன்றத்திற்குள் நுழைந்தவுடன் அனைத்து பிரிவுகளுடனும் இணைந்து பணியாற்றுவார் என்று நம்புகிறேன் என்றார்.
இன்று முன்னதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் எம்.பி.யாக பதவியேற்க உள்ளார்.
2020 நாடாளுமன்றத் தேர்தலில் 249,435 வாக்குகளைப் பெற்று ஐ.தே.க ஒரு தேசிய பட்டியல் இடத்தைப் பெற்றது. எந்த ஒரு ஆசனத்தையும் நேரடியாக வெற்றியீட்டவில்லை.
கட்சியின் தேசியப்பட்டியல் நியமனத்தை ஏற்கும்படி கட்சியின் செயற்குழு பல முறை ரணிலை வற்புறுத்திய பாதும், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி கற்று சட்டத்தரணியாக தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த ரணல் விக்கிரமசிங்க 1977 ஆம் ஆண்டில் பியகம தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலில் பாராளுமன்றத்தில் நுழைந்தார்.
தனது 28 வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு, தொடர்ந்து 44 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்து வருகிறார்,. இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இந்த சாதனைக்கு அவர் மட்டுமே சொந்தக்காரர்.
2015 நாடாளுமன்றத் தேர்தலின் போது, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 500,566 விருப்பு வாக்குகளை பெற்றார்.
1993 ஆம் ஆண்டில் 44 வயதில் பிரதமராக பொறுப்பேற்ற அவர், 4 தடவைகள் பிரதமராக பதவிவகித்துள்ளார்.