யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் பிரதானியாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவின் பணிப்பாளராக இருந்த பிரியந்த லியனகே, ஆணைக் குழுவின் காலம் நிறைவுற்ற பின்னர் பொலிஸ் தலைமையகத்தில் பொறுப்புக்கள் எவையும் வழங்கப்படாது கடமையில் அமர்த்தப்பட்டிருந்தார்.
தற்போது அவர் தற்போது யாழ். பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட போது, அந்த பொலிஸ் பிரிவின் முதல் பணிப்பாளராகவும் பிரியந்த லியனகே கடமையாற்றியிருந்தார்.
இதுவரை யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய மகேஸ் சேனநாயக்க பொலிஸ் நலன்புரி பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டு கொழும்பு அழைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அம்பாறை மாவட்டத்துக்கும் புதிதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய ஏ.கருணாரத்ன மேல் மாகாண குற்றத் தடுப்பு விவகாரங்களை கையாள்வதற்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பிரிவின் பிரதானியாக செயற்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.வை.செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.