தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,047 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,. 2020 மார்ச் மாதத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் அதிகமானவர்கள் கைதான சந்தர்ப்பம் ஈதவாகும்.
அவர்களில் 160 பேர் மாத்தளையிலும், 119 நிகவரெட்டியவிலும், 98 பேர் கண்டியிலும் கைது செய்யப்பட்டனர்.
ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் 19,102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று மேலதிக பொலிசாரும் சிறப்பு நடவடிக்கைகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
இதற்கிடையில், மேற்கு மாகாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது 4,636 முச்சக்கர வண்டிகள் பரிசோதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி பயணித்ததாக 17 முச்சக்கர வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
மேலும், மேற்கு மாகாணத்திற்கு 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 2,481 வாகனங்களில் பயணித்த 4,484 நபர்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 156 பேர் அத்தியாவசிய தேவையின்றி மாகாண எல்லைகளை கடந்து செல்ல முயன்றதற்காக திருப்பி அனுப்பப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.




