நுவரெலியாவில் சிரேஸ்ட தொழிற்சங்க அரசியல் வாதியாக செயல்பட்டு வந்த தனுஸ்கோடி மாதவன் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுவரெலியா பொது வைத்தியசாலையில் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது (71).
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி நுவரெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதுடன் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதணையில் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இந்த நிலையில் இவர் நுவரெலியா பொது வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவு விசேட வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்ததாக நுவரெலியா மாவட்ட கொரோனா தடுப்பு பிரிவின் பிராந்திய தொற்றியியல் பணிப்பாளர் மதுர செனிவிரத்ன தெரிவித்தார்.
நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்ற அமரர் டி.மாதவன் ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார.; இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாநில பிரதிநிதியாக 1976 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் (ஐயா)வின் நன்மதிப்பு பெற்று செயற்பட்ட மூத்த தொழிற்சங்கவாதியாவார்.நுவரெலியா, பதுளை மற்றும் அட்டன் பொன்ற இடங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாநில பிரதிநிதியாகவும் தொழிலுறவு அதிகாரியாகவும் சேவையாற்றியுள்ளார். 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக உலக தொழிலாளர் சம்மேளனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட இவர் ஸ்ரேல், ஜப்பான்,இந்தியா மலேசியா,சிங்கபூர் உட்பட பல உலக நாடுகளுக்கு சென்று பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளார். அவர் வெளிநாடுகளுடன் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட தேயிலை தொழிலாளர்களின் பிரச்சிணைகளை சர்வதேச ரீதியில் அணுகிவந்தவராவார். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸன் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நுவரெலியா மாநகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றுப்பெற்று நுவரெலியா மாநகரசபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். அதன் பின் ஐக்கிய தேசிய கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மூன்றாவது தடவையாக சுயேட்சையாகவும் போட்டியிட்டு மூன்றாவது முறையாகவும் நுவரெலியா மாநகர சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நுவரெலியா மாநகர சபையில் மூன்று முறை சிரேஸ்ட உறுப்பினராக இருந்து நுவரெலியா மக்களுக்கு சேவையாற்றியுள்ளார்.
கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் மறைந்த முன்னாள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் எம்.எஸ்.செல்லசாமி தலைமையிலான இலங்கை விவசாயிகள் சங்கத்தின் சிரேஸ்ட பொது செயலாளராக செயற்பட்டு நுவரெலியா மாவட்ட விவசாயிகள் எதிர் நோக்கிவந்த பிரச்சிணைகளுக்கு பல தீர்வுகளை கண்டதுடன் முதல் முறையாக விதை உருளைக்கிழங்கு நுவரெலியாவில் பயிர் செய்கை செயற்பாடுகளுக்கு சக்தியாக இவர் செயல்பட்டார்;. இவர் காலப்போக்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று இலங்கை விவசாயிகள் சங்கத்தினை வழிநடத்தினார். இவர் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுப்பையா சதாசிவம், முன்னாள் பிரதியமைச்சரான வடிவேல் புத்திரசிகாமணி ஆகியோரின் இணைப்பிரியாத நண்பராவார். இவரின் பூதவுடல் நுவரெலியா மாநகர சபை பொது தகன சாலையில் கொரோனா சட்ட விதிகளுக்கமைய பிற்பகல் 2 மணிக்கு தகனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-தலவாக்கலை பி.கேதீஸ்-