கொழும்பு துறைமுகத்திற்கு அருகே தீப்பிடித்த X-PRESS PEARL கப்பலின் கொள்கலன் பாகங்கள், மற்றும் பல பொருட்கள், சொக்லேட் போன்ற சிற்றுண்டிகள் நீர்கொழும்பு, ஜா-எல, கபும்கொட, சேத்தப்படுவ மற்றும் துங்கல்பிட்டிய கரையோரங்களில் ஒதுங்கியுள்ளன.
கரையொதுங்கும் சொக்லேட் போன்ற தின்பண்டங்கள் மற்றும் பொருட்களை சேகரிப்பதில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தகவல்படி, வத்தளையின் ப்ரிதிபுர தொடக்கம் நீர்கொழும்பு வரையான 9 கிலோ மீற்றர் தூரத்திற்கு பொருட்கள் கரையொதுங்கியுள்ளன.
இதற்கிடையில், கப்பலின் தீயை அணைக்க பெல்- 212 உலங்கு வானுர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீயை அணைக்க இன்று 425 கிலோகிராம் உலர் இரசாயன தூள் வீசப்பட்டது.
எனினும், நேற்றைய தினத்தை விட இன்று தீ அதிகரித்துள்ளது.
கப்பலின் முன் பகுதியில் பரவிய தீ, இப்பொழுது கப்பலின் அனேக பகுதிகளிற்கு பரவி விட்டது. எனினும், கப்பலின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படவில்லை, எண்ணெய் கசிவு குறித்த தகவல்கள் இல்லையென கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷினி லஹந்தர தெரிவித்தார்.
தீயை அணைக்க இரண்டு இந்திய கப்பல்கள் வந்துள்ளன. மோசமான வானிலை, கடற்கொந்தளிப்பால் மீட்பு பணிகளில் தாமதம் உள்ளது.