2020/2021 கல்வி ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று 21ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
மாணவர்களினால் பூர்த்தி செய்யப்படும் விண்ணங்களை புகைப்படபிரதி செய்து அதில் கையெழுத்திட்டு உறுதி செய்து அதனை apply2020@UGC.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் நூலை மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
2020/2021 கல்வி ஆண்டில் 41,755 அனுமதிக்க முடியுமென நம்புவதாகவும், 2020 உயர்தர பரீட்சையில் 300,000 இற்கும் அதிக மாணவர்கள் தோற்றி, கிட்டத்தட்ட 180,000 மாணவர்கள் 3 பாடங்களிலும் தேர்ச்சி பெற்று பல்கலைகழக நுழைவு தகுதி பெற்றதாகவும் குறிப்பிட்டார்.



