சுகாதார வழிமுறைகளை மீறி மட்டக்களப்பு, கோட்டைமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிறந்தநாள் நிகழ்வை ஏற்பாடு செய்த வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நேற்று (10) இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது, குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நிகழ்வில் கலந்து கொண்ட 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு நகரில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய 110 பேர் நேற்று கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் வைத்து ரபிட் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, 8 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மட்டக்களப்பு மாவட்ட செயலக காணிப்பகுதி உத்தியோகத்தர் ஒருவரும் உள்ளடங்குகிறார்.
அவர் தொற்றிற்குள்ளானதையடுத்து, நேற்றைய தினமே மாவட்ட செயலக காணிப்பிரிவு மூடப்பட்டது.



