கோவிட் கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளைமீறி செயற்பட்ட கோவில் நிர்வாகத்துக்கு பொறுப்பானவரும், முகக்கவசமின்றி பேருந்தை ஓட்டிய இ.போ.ச பருத்தித்துறைச் சாலை சாரதியும், முகக்கவசமின்றி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தக நிலைய ஊழியர்களும் பருத்தித்துறை பொதுச்சுகாதார பரிசோதகர்களால் கட்டாய சுயதனிமைப்படுத்தலு்கு உட்படுத்தப்பட்டனர்.
மூன்றாவது நாளாகவும் பொதுசுகாதாரபரிசோதகர்கள் ஜென்சன் றொனால்ட், சுதாகரன் தலைமையில் இராணுவம், பொலிஸ், மற்றும் கிராமசேவகர்கள் குழுவாக பருத்தித்துறை பகுதியில் அதிரடியாக கொரோனா கட்டுப்பாட்டு பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்போது, கோவில்களில் மக்களை ஒன்றுகூட்ட இடமளிக்க வேண்டாம் என்ற கட்டுப்பாட்டைமீறி பருத்தித்துறை சிவன் கோவிலில் மக்களை முகக்கவசங்கள் சரியாக அணியாத நிலையில் ஒன்றுகூட்டி பூஜை நிகழ்வுகள் இடம் பெற்றதால் அதற்குப் பொறுப்பான கோவிலின் உரிமையாளர் 14 நாட்களுக்கு கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உடபடுத்தப்பட்டார்.
அத்துடன் நெல்லியடிப்பகுதியூடாக பருத்தித்துறை நோக்கி முகக்கவசம் அணியாது பேரூந்தை செலுத்தி வந்த இ.போ.ச சாரதியொருவரும் விசாரணையின் பின்னர் தனிமைப்படுத்தப்படடார்.
மேலும் பருத்தித்துறை வர்த்தக நிலையங்களில் முகக்கவசத்தை முறையாக அணியாத வர்த்தகர்கள் 11 பேரும் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும் வாடிக்கையாளரின் வருகைப் பதிவுகளை முறையாக பேணாமலும் முகக்கவசத்தை அணியாமலும் சிகையலங்கரப்பில் ஈடுபட்ட நபரெருவரும் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.
நாட்டில் கொரோனாவைரஸ் பரவல் மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில் பொதுமக்கள் பொறுப்பற்றவிதமாக செயற்படுவதால் நாடு மிக மோசமான நிலையை நோக்கி நகர்கின்றது. எனவே சரியான விதத்தில் முகக்கவசங்களை அணிந்து, கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டுக் கழுவி தனிநபர்களிடையே ஒரு மீற்ரர் இடைவெளியைப்பேணி எப்போதும் செயற்படுவதனால் கொரோனா பரவல் பாதிப்பை குறைத்துகொள்ள முடியும் என்பதோடு தேவையற்ற விதத்தில் ஒன்றுகூடுவதையும் தவிர்த்து அனைவரும் பொறப்புடன் செயற்பட்டு கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என்று பொதுசுகாதார பரிசோதகர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.




