யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த முதியவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சை பிிவில் யாழ் நகரை சேர்ந்த 77 வயது முதியவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக துரித அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று இல்லையென தெரிய வந்தது.
எனினும், அவரிடம் பிசிஆர் மாதிரி பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
அவர் அன்று 7வது விடுதிக்கு மாற்றப்பட்டு, அன்றைய தினமே 9வது விடுதிக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று (5) காலை உயிரிழந்தார்.
நேற்று பகல் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று மாலை வெளியான பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, அவரது சடலத்தை சுகாதார விதிமுறைகளின் படி தகனம் செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் நிலைமையினால் இறுதிச்சடங்கில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.




