கொரோனா அபாய நிலையிலும் தேசிய வெசாக் நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடத்தி முடிப்பதில் அக்கறை காட்டும் அரசு, நயினாதீவு மக்களிற்கு தடுப்பூசி செலுத்தியாவது நிகழ்வை நடத்தலாமா என ஆலோசனை கேட்ட சம்பவமும் நடந்துள்ளது.
இம்முறை தேசிய வெசாக் கொண்டாட்டங்கள் நயினாதீவு நாகவிகாரையில் நடைபெறவுள்ளது. யாழில் சில நூறு பக்தர்கள் கூடினார்கள் என்பதாலேயே சைவ ஆலயங்கள் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், சுமார் 300 பேர் வரையானவர்களுடன் நடைபெறவுள்ள வெசாக் கொண்டாட்டத்திற்கு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் வைத்து வருகிறார்கள்.
வெசாக் ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்காக யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (30) கலந்துரையாடலொன்று நடந்தது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர்பேராசிரியர் கபில குணவர்த்தன தலைமையில் இந்த கலந்துரையாடல் நடந்தது.
கொரோனா நடைமுறைகள் காரணமாக ஆட்களை குறைத்து, சுகாதார நடைமுறைகளின்படி 300 பேரே கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி, பிரதமர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய கலந்துரையாடலில் புத்தசாசன அமைச்சின் செயலாளர், நயினாதீவில் எத்தனை பேர் உள்ளனர் என கேள்வியெழுப்பியுள்ளார். 3,000 பேர் அங்கு வசிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அவர்களிற்கு தடுப்பூசி செலுத்தி வெசாக் நிகழ்வை நடத்த முடியாதா என செயலாளர் கேள்வியெழுப்பினார்.
அவர்களிற்கு தடுப்பூசி செலுத்துவது பற்றி நாம் தீர்மானிக்க முடியாது, சுகாதார அமைச்சே தீர்மானிக்க வேண்டுமென வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கொரோனா தொற்று அதிகமிருந்த சில பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட போதும், வடக்கு மக்களிற்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கவில்லை. நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது மக்களுடன் நெருக்கமான பணியாற்றும் கிராமசேவகர்களிற்கும் இன்னும் தடுப்பூசி செலுத்தாததை சுட்டிக்காட்டி, வேலை நிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வெசாக் கொண்டாட்டத்திற்காக நயினாதீவில் 3,000 தடுப்பூசிகளை அரசு செலுத்த திட்டமிடுகிறதா என்ற கேள்வியெழுந்துள்ளது.




