ராஜஸ்தானில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் போலீஸ் கான்ஸ்டபிளுக்கு, விடுப்பு கிடைக்காத காரணத்தால், அவரது திருமண நலுங்கு விழா, போலீஸ் ஸ்டேஷனிலேயே நடத்தப்பட்டது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார்களை கொரோனா வாரியஸ் என மக்கள் போற்றி வருகின்றனர். கொரோனா முன்கள பணியாளர்களான இவர்கள், உணவு, உறக்கம் இல்லாமல் பணியாற்றுவதால் தான் மக்கள் கொஞ்சமாவது இயல்பு நிலையில் இருக்க முடிகிறது.
இந்நிலையில், ராஜாஸ்தானின் துர்காபூர் கோட்வாலியில் உள்ள ஒரு பெண் கான்ஸ்டபிள், கொரோனா ஊரடங்கு காரணமாக விடுமுறை அனுமதிக்கப்படாததால், அவரது திருமண நலுங்கு விழா காவல் நிலைய வளாகத்திலேயே நடைபெற்றது. கான்ஸ்டபிள் ஆஷாவும், அவரது வருங்கால கணவரும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா இரண்டால் அலை வேகமாக பரவ, மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அவருக்கு விடுமுறை கிடைக்காத சூழல் உருவானது. இதனையடுத்து, அவருக்கு காவல் நிலையத்திலேயே திருமணத்திற்கு முன்பு நடைபெறும் சடங்கான நலுங்கு வைக்கும் விழாவை நடத்த சக போலீசார் முடிவு செய்தனர். உறவினர்களாக மாறிய போலீசார், அவருக்கு முகத்தில், கைகளில் மஞ்சள் பூசி நலுங்கு வைக்கும் விழாவை கொண்டாடினர். திருமண பாடல்களை பாடி அவரை மகிழ்வித்தனர். விழாவில் அனைத்து சடங்குகளும் பின்பற்றப்பட்டிருக்கிறது.
அதிர்ஷ்டவசமாக நலுங்கு விழா முடிந்த அன்றைய மாலை பொழுதிலேயே அவருக்கு விடுமுறை அனுமதி கிடைத்திருக்கிறது. பின் அவர் தன் சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார். ஆஷாவின் தந்தை விவசாயியாகவும், அவரது தாய் ஒரு இல்லத்தரசியாகவும் உள்ளனர்.