மிசோரமை சேர்ந்த பெண் ஒருவர், எய்ட்ஸ் பாதித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்து அவர்கள், சாதாரண வாழ்க்கை வாழ உதவி செய்திருக்கிறார். அந்த மனசு தான் சார் கடவுள்!
மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர் வன்லால் ரூட்டி கொல்னி. தனது இளம் வயதிலேயே போதைப் பழக்க வழக்கத்துக்கு அடிமையான இந்த பெண், 20 வயதில் எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளானது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டதால், திரவம் வெளியேறி, அவரது தோல் பெட்சீட்டில் ஒட்டிக் கொள்ளுமாம். இதனால் மருத்துவமனை ஊழியர்கள் கூட அவரை தொட தயங்குவார்களாம்.
குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரும் தன்னை ஒதுக்கிய நிலையில், சமூகத்தை எதிர்த்து வாழ துவங்கிய இவர், தன்னைப் போல் எய்ட்ஸ் நோயால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவ முடிவு செய்திருக்கிறார். எச்.ஐ.வி மற்றும் அதன் சிகிச்சையைப் பற்றி நன்கு அறிந்திருக்காத அந்த காலத்திலேயே, திடமான மனதுடன், உயிர்கொல்லி வைரஸை தோற்க உறுதி பூண்டு, மெல்ல மீண்டு வந்திருக்கிறார். சிகிச்சை எடுத்து கொண்டே, உள்ளூர் தேவாலயக் குழுவில் சேர்ந்தார். எச்.ஐ.வி நோயாளிகளுக்கு, அவர்களின் கஷ்டங்களையும் சுமைகளையும் குறைக்க உதவ வேண்டும் என்ற ஆசை அங்கு அவருக்குள் வலுவடைந்திருக்கிறது.
2007 ஆம் ஆண்டில், எய்ட்ஸ் பாதித்த பெண்களுக்காக தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவினார். அவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் மூலம் பயனடைய செய்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை வருங்கால திட்டமாக கொண்டிருக்கிறார். இவர் மூலம் தற்போது வரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான எய்ட்ஸ் நோயாளிகள் வேலைவாய்ப்பு பெற்று, இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இவரை கவுரவித்த மத்திய அரசு, கடந்த 2019 ஆம் ஆண்டில், ‘முன்மாதிரி பெண்’ விருது வழங்கி கவுரவித்திருக்கிறது. தற்போது 37 வயதான கொல்னி கூறுகையில், ‘நான் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டு அதன்படி நடக்கிறேன். கடந்த 18 ஆண்டுகளாக, நான் நிதானமாக இருக்க இது உதவியது’ என்றார்.