முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணவாளன்பட்ட முறிப்பு பகுதியில் நேற்றிரவு காணி ஒன்றினுள் மின்சார வேலியை உடைத்து கொண்டு நுழைந்த காட்டு யானை தாக்கியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மணவாளன்பட்டமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த சிவராசா என்பவருடைய காணியில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த யானை வீட்டினை சேதப்படுத்தியதோடு வீட்டின் உரிமையாளரான சிவராசா என்பவரையும் தாக்கிய நிலையில் அவர் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் காட்டு யானைகள் உடைய தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக பயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு குறித்த மணவாளன் பட்டமுறிப்பு பகுதிகளை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தாக்குதல்களால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். குறித்த நபர் தன்னுடைய காணிக்கு மின்சார வேலியை அமைத்து இருந்தும் அதனை உடைத்து கொண்டு யானை உள்நுழைந்துள்ளது. ஆனால் அப்பகுதியில் பல குடும்பங்கள் மின்சார வேலிகள் கூட இல்லாமல் நாளாந்தம் அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




