சீன அணுசக்தி கப்பலொன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த தகவல் வெளியாகியுள்ளது.
அணுசக்தி கதிர்வீச்சை வெளியிடும் கப்பலொன்று பிரவேசித்ததாகவும், அதை இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை நிறுவனத்தால் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அணுசக்தி பொருட்களுடன் ஒரு வெளிநாட்டு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ளது என்ற தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும், தகவலின் உண்மையை உடனடியாக நாட்டிற்கு வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிவிக்பை வெளியிட்ட அவர், அணுசக்தி நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமல் நேற்று கப்பல் வந்துவிட்டதாகவும், கப்பலை ஆய்வு செய்ய அனுமதிக்கவில்லை என்றும் கூறினார்.
அதன்படி, இது தொடர்பான தகவல்களை உடனடியாக நாட்டிற்கு வெளியிடுமாறு அவர் அரசிடம் கேட்டுக்கொண்டார்.
இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், அனில் ரஞ்சித் கூறுகையில், இந்த கப்பல் ரோட்டர்டாம் துறைமுகத்திலிருந்து சீனாவுக்குச் செல்லும் போது, தொழில்நுட்ப சிக்கலைத் தொடர்ந்து சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தது என்றார்.
கப்பல் வரும்போது அதன் சரக்குகளில் கதிரியக்க பொருட்கள் இருப்பதை பற்றிய தகவலை வெளியிடவில்லை என்று அனில் ரஞ்சித் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை நிறுவனம் அதன் பின்னர் கப்பலை உள் துறைமுகத்திலிருந்து வெளி துறைமுகத்திற்கு நகர்த்த நடவடிக்கை எடுத்தது, தற்போது அது துறைமுகத்திற்கு வெளியே தரித்துள்ளது.
இந்த கப்பல் உடனடியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து புறப்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



