தென்மராட்சியில் குடியிருப்பாளர் ஒருவரால் காப்பற் வீதியின் மேலாக சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த கொங்கிறீட் உடைத்து அகற்றப்பட்டுள்ளது. தமிழ்பக்கத்தில் இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து, சாவகச்சேரி நகரசபையினர் நடவடிக்கையெடுத்ததை தொடர்ந்து, கொங்கிறீட் உடைத்து அகற்றப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட சங்கத்தானையில் குடியிருப்பாளர் ஒருவர் காப்பற் வீதியை மூடி கொங்கிறீட் போட்டிருந்தார். இதனால் வீதியில் பயணிப்போர் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
இதனை அகற்றுமாறு பலமுறை நகரசபையால் குறித்த குடியிருப்பாளருக்கு அறிவித்தல் விடுத்தும் கொங்கிறீட் அகற்றப்படவில்லை.
இந்நிலையில் குடியிருப்பாளரின் விசித்திர செயற்பாடு தொடர்பாக தமிழ்பக்கம் சு்ட்டிக்காட்டியிருந்தது.
இதையடுத்து சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் சிவமங்கை இராமநாதன் குறித்த குடியிருப்பாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதையடுத்து வீதியில் போடப்பட்டிருந்த கொங்கிறீட் அகற்றப்பட்டுள்ளது.




