மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹைஏஸ் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது . நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான எம்ஐ.அக்பர் (46) என்பவரே பலியானதாக ஏறாவூர்ப் பொலிஸார் கூறினர்.
இவர் நிந்தவூரிலிருந்து ஓட்டமாவடியை நோக்கி மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தவேளை வீதியைக் குறுக்கிட்டு தெருநாய்கள் பாய்ந்ததையடுத்து வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது இவரது மோட்டார் சைக்கிள் எதிரே வலது பக்கமாக வந்த மோட்டார் வண்டியுடன் மோதியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். வாழைச்சேனையில் வசித்துவரும் தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றவேளை இவர் விபத்தில் சிக்கியதாக தெரிய வருகிறது.
திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தார்.
ஏறாவூர்ப் பொலிஸார் இதுகுறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




