புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கக் கோரி இலங்கையின் 11 மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு தவிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி மறவன்புலவில் உணவு தவிர்ப்பு ஈடுபடும் மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் தொன்மையான ஒரேயொரு சமயம். ஏனையவை அனைத்தும் வந்தேறி சமயங்கள். சைவ சமயம் இன்று மிக கேவலமான நிலையில் உள்ளது. சைவர்கள் தொடர்ந்து இருப்பார்களா என்பதே கேள்விக்குறியாகும்.
மதமாற்றிகளின் செயற்பாட்டால் கிழக்கு மாகாணத்தை இழந்து விட்டோம். மன்னார் மாட்டத்தை இழந்து விட்டோம். மத மாற்றிகளினால் வடக்கில் பல சைவர்கள் பிற மதங்களிற்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
மத மாற்ற தடைச்சட்டத்தை கொண்டு வர வேண்டும். பல முறை கொண்டு வர முயற்சித்தும், மேலாதிக்க சக்திகள் அதை தடுத்து விட்டன. மத மாற்ற தடைச்சட்டம் சைவர்களையும், புத்தர்களையும் காப்பாற்றும்.
அதேபோல் இந்து மக்கள் பசுவினை கோமாதா என வணங்குகின்றோம். ஆனால் இங்கே மாடுகளை வெட்டி உண்கிறார்கள். அதனையும் நிறுத்த கோருகின்றோம். அதாவது பாலைவனங்களில் தான் மாடுகளை அறுத்து உண்பார்கள். ஆனால் இலங்கை ஒரு சோலைவனம். இங்கே மாடுகளை கோமாதாவாக வணங்கி அவைகளைப் பாதுகாக்க வேண்டும்.
எனவே இலங்கையில் மாடுகள் வெட்டுவதை நிறுத்த வேண்டுமெனவும் கோரி இன்றைய தினம் உணவு தவிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.



