ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியாவின் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். இவரின் சொத்துமதிப்பு 8,450 கோடி அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 10 கோடீஸ்வரர்கள் பட்டியல் குறித்து ஃபோர்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது
இந்தியாவில் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார்.
ஆசியாவிலேயே முதல் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானிக்கு, கொரோனா லொக்டவுன் காலத்தில் மட்டும், 3,500 கோடி அமெரிக்க டொலர் சொத்து சேர்ந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர கடன் பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு 8,450 கோடி அமெரிக்க டொலர்கள் எனத் தெரியவந்துள்ளது.
2வது இடத்தில் ரியல் எஸ்டேட் அதிபரும், கட்டுமானத்துறையில் ஜாம்பவானுமான கவுதம் அதானி உள்ளார். அதானின் சொத்து மதிப்பு 5,050 கோடி டொலராக அதிகரித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 5 மடங்கு உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
3வது இடத்தில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் உள்ளார், இவரின் சொத்து மதிப்பு 2,350 கோடி டொலராகும். கடந்த ஆண்டு நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ஷிவ் நாடார் விலகியபோது 990 கோடி டொலர் சொத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நிறுவனத்தின் தலைவராக ஷிவ் நாடாரின் மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா உள்ளார்.
4வது இடத்தில் அவென்யூ சூப்பர்மார்ட் நிறுவனத்தின் அதிபர் ராதாகிஷன் தாமணி 1,650 கோடி டொலர் மதிப்பு சொத்துக்களுடன் உள்ளார். 5வது இடத்தில், கோடக் மகிந்திரா மேலாண் இயக்குநர் உதய் கோடக் 1,590 கோடி டொலர் சொத்துக்களுடன் உள்ளார்.
இதில் முதல் 3 இடங்களில் இருக்கும் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, ஷிவ் நாடார் ஆகியோரின் சொத்து மதிப்பு மட்டும் 10 ஆயிரம் கோடி டொலருக்கு அதிகரிக்கும என ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் கடந்த ஆண்டு 102 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் இருந்த நிலையில் இது இந்த ஆண்டு 140 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, 59,600 கோடி அமெரிக்க டொலர் அதாவது, இந்திய மதிப்பில் ரூ.44.27 லட்சம் கோடியாகும்.