2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜூல் அக்பர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், குண்டுவெடிப்பின் பின்னணியில் நௌபர் மௌலவி, ஹஜ்ஜூல் அக்பர் செயற்பட்டு, சஹ்ரன் ஹாஷிமை இயக்கியதாக தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டில் இஸ்லாமிய அரசின் நிறுவனர் அல் பக்தாதி ஐ.எஸ் அமைப்பை நிறுவியதாகவும், 2016 ஆம் ஆண்டில் நௌபர் மௌலவி ஐ.எஸ் சித்தாந்தங்களை நாட்டிற்கு கொண்டு வந்து, சஹ்ரான் ஹாஷிமை மூளைச் சலவை செய்ததாகவும் குறிப்பிட்டார்.
ஜமாத் இஸ்லாம் அமைப்பின் தலைவரான ஹஜ்ஜூர் அக்பரை தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒரு தீவிரவாதியாக பொலிசார் அடையாளம் கண்டு தடுத்து வைத்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.
குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க 32 ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுடன் தொடர்புடைய 211 பேர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், 75 பேர் தடுப்புக்காவலில் உள்ளனர் என்றார்.



