பாகிஸ்தான் வீரர் பஹர் ஜமான் ரன் அவுட் சர்ச்சையில் தென்னாபிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் குயின்டன் டி கொக் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அவர் விளையாட்டுணர்வை கொச்சைப்படுத்தி விட்டார் என மூத்த வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று முன்தினம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 31 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தை அடித்து விட்டு 2வது ஓட்டத்திற்காக முயற்சிக்கையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பஹர் ஜமான் (193 ஓட்டங்கள்) தென்னாபிரிக்க வீரர் மார்க் ராமால் ‘ரன் அவுட்’ செய்யப்பட்டார்.
இந்த ‘ரன் அவுட்’ கடும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அதாவது பஹர் ஜமானின் கவனத்தை திசை திருப்பும் வகையில் தென்னாபிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டன் டி கொக் செயல்பட்டதே ரன் அவுட்டுக்கு காரணமாக அமைந்தது.
எதிர்முனை ஸ்டம்பின் அருகில் நின்ற பந்து வீச்சாளர் நிகிடியை நோக்கி பந்தை எறியும்படி குயின்டன் டி கொக் சைகை காட்டியதால் பஹர் ஜமான் பந்து தன்பக்கம் வரவில்லை என்று நினைத்து ஓட்ட வேகத்தை குறைத்ததுடன், மறுமுனையில் நின்ற துடுப்பாட்ட வீரர் ஹாரிஸ் ராவுப்பை திரும்பி பார்த்தார்.
ஆனால் பீல்டர் வீசிய பந்து விக்கெட் கீப்பர் குயின்டன் டி கொக் நின்ற ஸ்டம்பை நேராக தாக்கியது.
Quinton doing Fakhar Zaman dirty with that run out. Cheeky by de Kock. pic.twitter.com/M2l0rweHa4
— omkar (@omviously) April 4, 2021
‘ரன்-அவுட்’ விஷயத்தில் விளையாட்டு உத்வேகத்துக்கு எதிராக செயல்பட்ட டி கொக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த விஷயத்தில் நடுவர்கள் தான் முடிவு செய்ய முடியும் என்று போட்டிக்கான விதியை உருவாக்கும் மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் தெரிவித்துள்ளது.