நீர்கொழும்பில் பத்து விபச்சார விடுதிகளில் பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் 24 யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் இயங்கிய இந்த விடுதிகளிற்கு, தொலைதூர கிராமங்களில் இருந்து யுவதிகள் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். மசாஜ் நிலைய பயிற்சியாளர் என்ற பெயரில், அவர்கள் செயற்பட்டு வந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
வெல்லவிடிய, குடாப்படுவ, பெரியமுல்ல, எலபர பகுதிகளில் இந்த விடுதிகள் இயங்கி வந்தன.
அங்கு முறையான பயிற்சிபெற்ற யாரும் கடமையில் இருக்கவில்லை. சுகாதார அனுமதியும் பெறப்பட்டிருக்கவில்லை.
ஆயுர்வேத மசாஜ் நிலையத்தில் பயிற்சியாளர் தேவையென்ற பத்திரிகை விளம்பரம் பிரசுரிக்கப்பட்டு திஸ்ஸமஹாராம, அனுராதபுரம், பொலன்னருவை, நிகவெட்டிய, உடுதும்பர, கலென்பிந்துநுவேவ மற்றும் தம்புத்தேகம போன்ற பகுதிகளை சேர்ந்த 20- 28 வயதிற்கிடைப்பட்ட யுவதிகள் அங்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பதில் நீதிவான் நெல்சன் குமாரநாயக்க முன்னிலையில் அவர்கள் முற்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர்களில் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களிற்கு தலா ரூ .5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டனர்.
குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாத யுவதிகள் தலா ரூ .500,000 பிணையில் விடுவிக்கப்பட்டனர்.




