ஐபிஎல் ரி20 தொடரில் டெல்லி கபிடல்ஸ் அணியின் சகலதுறை வீரர் அக்ஸர் படேலுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
14வது ஐபிஎல் சீசன் வரும் 9ஆம் திகதி சென்னையில் தொடங்குகிறது. இதில் சிஎஸ்கே – டெல்லி கபிடல்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் மும்பையில் 10ஆம் திகதி நடைபெறுகிறது. இதற்காக இரு அணிகளும் மும்பையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் டெல்லி கபிடல்ஸ் சகலதுறை வீரர் அக்ஸர் படேலுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 28ஆம் திகதி மும்பை ஹோட்டலுக்கு அக்ஸர் படேல் வந்தபோது அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில் அடுத்த சிலநாட்களில் மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கெரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்த டெல்லி கபிடல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “அக்ஸர் படேலுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அணியின் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அக்ஸர் படேலைக் கண்காணித்து வருகின்றனர்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் நிதிஷ் ராணா கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.



