ஜேர்மனியில் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 31 ஈழத்தமிழர்கள் நேற்று (30) செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
நாடு கடத்தல் முடிவை கைவிட வலியுறுத்தி டுசில்டோர்ப் விமானநிலையத்திற்குள் ஈழத்தமிழ் மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.எனினும், ஜேர்மனி தனது முடிவை மாற்றவில்லை.
இந்த நாடு கடத்தல் முடிவை எதிர்த்து யேர்மனி ஈழத்தமிழர் மக்களவை, யேர்மனி இளையோர் அமைப்பு மற்றும் பெண்கள் அமைப்பு ஆகியன யேர்மனிய மனிதநேய அமைப்புக்களுடனும் கட்சிகளுடனும் இணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களை யேர்மனி முழுவதும் முன்னெடுத்து வந்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்து வைக்கப்பட்டிருந்தவர்களை டுசில்டோர்ப் விமானநிலையத்திலிருந்து நாடுகடத்துவதற்கான ஆயத்தங்கள் நடந்தபோது விமானநிலையத்தில் தமிழ்மக்களையும், யேர்மனி மனிதஉரிமை அமைப்புக்களையும், கட்சிகளையும் அணிதிரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தபோது நான்கு பேரை விடுதலை செய்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. இருந்தபோதும் 31 ஈழத்தமிழர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.