மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 12 வயதுச் சிறுமி, துன்புறுத்தப்பட்டதாலேயே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
பெரியகல்லாறு கிராமத்தை சேர்ந்த எஸ்.அஸ்வினி எனப்படும் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்து இருந்தார். இச்சிறுமியின் உடலில் துன்புறுத்தலுக்கான காயங்கள் காணப்படுவதாக கிராம மக்கள் கூறினர். உயிரிழந்த சிறுமியின் தாய் மலேசியாவில் பணிபுரிந்துவரும் நிலையில் சிறுமியின் சிறியதாயிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஓக்டோபர் மாதம் கிராமமக்களில் சிலர் 1929 என்ற சிறுவர் முறைப்பாட்டு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உயிரிழந்த சிறுமின் அழுகுரல் தொடர்ந்தும் அவ் வீட்டில் கேட்பதாகவும்,. அழகிய தோற்றம் கொண்ட சிறுமி அலங்கோலமான தோற்றத்துடன் காட்சியளிப்பதாகவும் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 09 ஆம் திகதி சிறுமி சுகவீனமடைந்த நிலையில் கிராமசேவகர் மற்றும் ஊர் மக்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அன்றே சிறியதாய் வைத்தியசாலையில் இருந்து சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அதனையடுத்து மறுநாள் 10 ஆம் திகதி சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மரண பரிசோதனையில், சிறுமி அடித்து துன்புறுத்தப்பட்டதாலேயே உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
பெண்கள் மூவர் உட்பட ஆறுபேர் இணைந்து 12 வயதான சிறுமியை அடித்து, காயப்படுத்தி, துன்புறுதி படுகொலைச் செய்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் அச்சிறுமியை அவ்வப்போது அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
இதனால், உடம்பின் பல இடங்களில் சிறுமிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த காயங்களின் ஊடாக கிருமித்தொற்றி, உடலுக்குள் புகுந்துவிட்டது. அதனாலேயே இச்சிறுமி மரணித்துள்ளார் என மரண பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள 6 பேர் மீதும் படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.




