டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் தாயார், மகள் வீடு திரும்புவார் என காத்திருக்கும் மனதை உருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1ஆம் திகதி டாம் வீதி பகுதியில் அநாதரவாக இருந்த சூட்கேஸிற்குள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் யுவதியின் சடலம் மீட்கப்பட்டது. அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கொலையாளியை அடையாளம் கண்ட பொலிசார், நேற்று மாலை படகும்புரவிலுள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.
வீட்டிலிருந்து தப்பியோடிய கொலையாளி, இன்று வீட்டின் அரகிலுள்ள இறப்பர் தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். புத்தல பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகரே கொலையாளி.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட யுவதியான குருவிட்ட, தெப்பன பகுதியை சேர்ந்த திலினி யசோதா ஜெயசூரிய (30) வருவார் என, அவரது வயோதிபத்தாய் காத்திருக்கிறார் என சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
28ஆம் திகதி அவர் வீட்டை விட்டு வெளியேறினார். 4 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவர் உயிரிழந்த தகவலை யாரும் தாயாரிற்கு தெரிவிக்கவில்லை. நோயாளியான அவர், தனது மகள் திரும்பி வருவார் என காத்திருக்கிறார்.
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்வதாக கூறிவிட்டே அவர் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். எனினும், அவர் தனது காதலனான புத்தல பொலிஸ் நிலைய எப பொலிஸ் பரிசோதகருடன், ஹன்வெல்லையிலுள்ள விடுதிக்கு சென்றார். மறுநாள் காலையில் அவர் கொலை செய்யப்பட்டு, சூட்கேஸிற்குள் மறைக்கப்பட்டு அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டார்.
ஆடைத் தொழிற்சாலை மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனமொன்றின் சிம் டீலராகவும் திலினி பணியாற்றியிருந்தார். எனினும், அவரது தாயார் நோயாளியான பின்னர் வேலையை விட்டுவிட்டு, தாயாரை கவனித்து வந்தார்.
அவரது மூத்த சகோதரன் குருவிட்ட பிரதேசசபையின் ஐ.தே.க உறுப்பினர். தாயாரும், இரண்டு பிள்ளைகளுமே வீட்டிலிருந்தனர். தந்தை 20 வருடங்களின் முன்னர் உயிரிழந்த விட்டார்.
வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், கொல்லப்படுவதற்கு முன்னர் சகோதரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிவனொளி பாத மலைக்கு சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
உள்ளூரில் பொதுப்பணிகளில் ஈடுபடுவது, சுவர்களில் வர்ணம் தீட்டுவது போன்ற வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். ஐ.தே.கவின் தீவிர செயற்பாட்டாளராகவும் இருந்துள்ளார்.
கொலையாளியான உபபொலிஸ் பரிசோதகர் பிரேமசிறி, கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் ஐ.தே.க இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேயின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினார்.
ஹேஷா விதானகேயின் கூட்டங்கள் பல, குருவிட்ட பிரதேசசபை உறுப்பினரின் வீட்டில் இடம்பெற்றன. அந்த நாடாளுமன்ற உறுப்பினருடன் வந்த பாதுகாப்பு அதிகாரிக்கும், பிரதேச சபை உறுப்பினரின் சகோதரியான கொலையுண்ட யுவதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகாரியை, “அங்கிள்“ என்றே யுவதி ஆரம்பத்தில் அழைத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலைக்குப் பிறகு நடந்த விசாரணையில், தனது சகோதரிக்கு பொலிஸ் அதிகாரி ஒருவருடன் காதல் உறவிருப்பதை சகோதரன் அறிந்திருந்தது தெரிய வந்தது. எனினும், அவர் தனது வீட்டுக்கு வந்து சென்ற பாதுகாப்பு அதிகாரிதான் என்பதும், அவர் திருமணமாகியிருந்தார் என்பதும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
அதேவேளை, தமது வீட்டிற்கு வந்து சென்ற பாதுகாப்பு அதிகாரியுடன் தனது சகோதரிக்கு இருந்த பழக்கத்தையும் அவர் அறிந்திருந்தார். எனினும், பாதுகாப்பு அதிகாரிக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்ததால் அது சாதாரண நட்பு என நினைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யுவதி கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், பாதுகாப்பு அதிகாரியின் சகோதரி என்று கூறும் ஒரு பெண், யுவதியின் சகோதரரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த விவகாரத்தை நிறுத்துமாறு அச்சுறுத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை, படகும்பர 5ஆம் மைல் கல் பகுதியில் இன்று காலை பொலிஸ் அதிகாரியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இறப்பர் மரத்தில் பால் வெட்ட அதிகாலையில் சென்ற முதிய தம்பதியொன்று சடலத்தை கண்டனர்.