தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் மீது சாணத்தை கரைத்து ஊற்றி, கம்புகளால் தாக்கி படுகாயங்களை ஏற்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட மஸ்கெலியா ஓட்டன் தோட்டத்தைச் சேர்ந்த 10 பேரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி விவகார வழக்கு, ஹட்டன் நீதிமன்ற நீதவான் நிமேஷ்கா பட்டபெந்திகே முன்னிலையில் இன்று (3) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேகநபர்களான 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அந்த பத்துபேரில் எட்டுப் பெண்களும் அடங்குகின்றனர். ஏனைய இருவரில் ஒருவர், 16 வயதுக்கு குறைந்தவர் என்பதனால், அவரை சிறுவர் நன்நடத்தை நிலையத்துக்கு அனுப்புமாறு உத்தரவிட்ட நீதவான், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் மேலும் 16 பேரையும் கைது செய்து அன்றையதினமே (மார்ச் 10) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஹொரனை பிளான்டேசனுக்கு சொந்தமான ஓல்டன் தோட்டத்தின் முகாமையாளர் உதவி முகாமையாளர் விடுதிகளுக்கு பெப்ரவரி 17 ஆம் திகதி திரண்டு சென்றிருந்த பொதுமக்கள் சாணத்தை கரைத்து அவ்விருவர் மீது ஊற்றி, குண்டாந்தடிகளால் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்தே, அத்தோட்டத்தைச் சேர்ந்த 10 பேர், சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அத்துமீறல், கொலைமுயற்சி மற்றும் கொள்ளையடித்துச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழே, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தோட்ட நிர்வாகத்தின் அடாவடி மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராகவும் நியாயம் கேட்க செல்லும் போதெல்லாம், தொழிலாளர்களை அவ்விருவரும் மிகக் கேவலனமான முறையில் நடத்தியுள்ளனர். அதில் கொதித்தெழுந்தே தொழிலாளர்கள் இவ்வாறான தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.