‘இது பௌத்த புராதன பூமி’: முல்லைத்தீவில் தமிழர் விவசாயம் செய்ய பிக்கு தலைமையிலான தொல்லியல் திணைக்களம் தடை!

Date:

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை துப்பரவு செய்து எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கோடு வேலைகளில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவரை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்தி பொலிஸார் மற்றும் வன வள திணைக்களத்தினரை ஏவி விட்டு வேலைகளுக்கு தடைவிதித்த சம்பவம் நேற்று மாலை (27)இடம்பெற்றுள்ளது.

தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் குமுளமுனை, தண்ணிமுறிப்பு குள வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பேரானந்தம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தினை துப்பரவு செய்து டோசர் இயந்திரம் மூலம் காணியை சமப்படுத்தும் வேலைகளில் காணி உரிமையாளர் நேற்று ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு சென்ற பௌத்த தேரர் ஒருவர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இவ்விடம் அனைத்தும் குருந்தூர்மலைக்கு சொந்தமான தொல்லியல் புராதன பூமி என தெரிவித்ததோடு, 500 ஏக்கர் நிலங்கள் புராதன பூமி, இங்கு இந்த வேலைகளிலும் ஈடுபடமுடியாது இங்கு எவருக்கும் நிலங்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தினர் மற்றும் வன திணைக்களத்தினரை அழைத்து காணி உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதோடு காணியை மேற்கொண்டு துப்பரவு செய்யமுடியாது என தெரிவித்து தடை விதித்து சென்றுள்ளதோடு காணி உரிமையாளரை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வருகைதருமாறு தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் பத்திரிகையாளர்களை தொடர்புகொண்ட கிராம மக்கள் இவ்வாறான விடயம் நடைபெறுகின்றது என அழைத்த காரணத்தால் அங்கு செய்தி அறிக்கையிடலுக்கு சென்ற பத்திரிகையாளர் ஒருவரின் ஊடக அடையாள அட்டையை வாங்கிய பொலிஸார் அதிலுள்ள விபரங்களை பதிவு செய்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசம் தமிழ் மக்கள் பல ஆண்டு காலமாக குடியிருந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட தண்ணிமுறிப்பு கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த பிரதேசம் என்பதோடு போருக்கு பின்னர் மீண்டும் தற்போது அப்பகுதியில் உள்ள தமது காணிகளை துப்பரவு செய்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த காணிகளில் வேலிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே கிளிசறியா மரங்கள் நடப்பட்டு எல்லைகள் இடப்பட்டுள்ளதும் மக்களின் காணிகளில் மா, பலா, தென்னை, போன்ற மரங்கள் கூட இன்றும் நிற்பதை காணமுடிகின்றது.

இந்த நிலையில் கடந்த மாதம் 18 ஆம் திகதியிலிருந்து குருந்தூர் மலையில் இராணுவம், தொல்லியல் திணைக்களம் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிலையில் தற்போது அதனை அண்டிய தமிழ் மக்களுக்கு சொந்தமான குடியிருந்த நிலங்கள் ,விவசாய நிலங்கள் என்பனவற்றை அபகரிக்கும் நோக்கமாக இன்று இந்த நடவடிக்கையில் பௌத்த தேரர் தலைமையிலானோர் ஈடுபட்டுள்ளமை கிராம மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்