வெருகல் படுகொலை என பிள்ளையான் துணை இராணுவக்குழு அழைக்கும் சம்பவத்தின் 21 வது ஆண்டு நினைவு நாள் ‘சிவப்பு சித்திரை’ வாகரை பிரதேசத்தின் கதிரவெளி மலைப் பூங்காவில் நேற்று வியாழக் கிழைமை மாலை(10) நினைவு கூறப்பட்டது.
தமிழ் மொழி வாழ்த்து பாடலுடன் ஆரம்பிக்கப்பட்டு உயிர் நீத்தவர்களுக்கான மலர் அஞ்சலியுடன் மௌன வீர அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுச் சுடர் ஏற்றல் நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த 21 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இம்முறை முதன் முதலாக நிகழ்வில் பங்கு கொண்டு பொதுச் சுடரினை ஏற்றி வைத்தார்.
வழமையாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நிகழ்வில் பங்கு கொள்வது வழக்கமாகும். எனினும், அவர் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதன் காரணத்தால் அவருக்கு பதிலாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவர் ஜெயம் என்று அழைக்கப்படும் நா.திரவியம் கலந்துகொண்டு நிகழ்விற்கு தலைமை வகித்தார்.
இதன்போது உயிர் நீத்தவர்களின் உறவுகள் தங்களது உறவுகளை நினைத்து ஈகைச் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதேவேளை தேர்தல் காலம் என்பதால் இம்முறை குறித்த நிகழ்வானது வழமை போன்று ஆரவாரம் இல்லாமல் அமைதியான முறையில் தேர்தல் சட்ட விதிகளுக்கு ஏற்ற வகையில் நடைமுறைகளை பின்பற்றி நினைவு கூறப்பட்டது.
2004 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து தனிநபர் நடத்தை பிறழ்வால் கருணா தலைமையிலான குழு பிரிந்து சென்றது.
இராணுவத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்த கருணா தலைமையிலான குழுவினர், தன்னுடன் பிரிந்து சென்றவர்களை விடுதலைப் புலிகளின் முன்னேற்றத்தை தடுக்க, பாதுகாப்பு அரண் அமைத்து நிறுத்தினர். இதேநாளில் கதிரவெளி மற்றும் வெருகல் எல்லைப் பிரதேசத்தில் கடல் மற்றும் தரைவழியாக அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள், கருணா குழுவினரை சரணடைய அவகாசமளித்தனர். எனினும், கருணா குழுவின் தவறான முடிவால் பெரும் மோதல் வெடித்தது. இதில் கருணா குழுவை சேர்ந்த சுமார் 179 ஆண், பெண்கள் கொல்லப்பட்டனர்.
இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் இவ் நிகழ்வை நினைவு கூர்ந்து வருகின்றமை வழக்கமாகும்.



