ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை புதன்கிழமை ஜனாதிபதி மாளிகைக்குள் சந்தித்திருந்தால் அவரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியே இழுத்துச் வந்திருப்பேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
“நான் ஜனாதிபதியை அவரது காதில் அல்லது கையை பிடித்து அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியே இழுத்து வந்திருப்பேன்” என்று பிரேமச்சந்திர ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
“ஜனாதிபதி உண்மையில் அந்த நேரத்தில் என்னுடன் பேச விரும்புவதாக செய்தி அனுப்பியிருந்தார். ஆனால். அவர் வெளியே வர வேண்டும் என்றேன். அல்லது நான் உள்ளே வருவதாயின் பேஸ்புக்கில் நேரலை ஒளிப்பியபடி வருவேன், ஓகேயா என தகவல் அனுப்பினேன். அதற்கு பதில் வரவில்லை.
அதன்பின்னரே எம்மை பலவந்தமாக பிடித்து வாகனத்தில் ஏற்றினார்கள். எமது தலைமுடியை பிடித்திழுத்தார்கள். என்னுடன் வந்தவர்கள் தாக்கப்பட்டனர் என்றார்.
“என்னுடைய செயலை இரகசியமாகத் திட்டமிட்டதால் அன்று உளவுத்துறை அதிகாரிகளை ஏமாற்ற முடிந்தது. நான் சில நாட்களாக அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்தேன், ஜனாதிபதியின் இல்லத்திற்குச் செல்லும் டச்சு மருத்துவமனையின் வழியைக் கண்டேன். இப்படித்தான் வீட்டை நெருங்கினேன். நான் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தால் மீண்டும் அதே தந்திரோபாயத்தைப் பயன்படுத்த மாட்டேன், ”என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், ஜூலை 9 ஆம் திகதி நடைபெறும் போராட்டம் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான இறுதி கிளர்ச்சியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். ஜூலை 9ஆம் திகதி நடைபெறும் இந்தப் போராட்டம் அன்றைய தினம் முடிவடையாது, ஆனால் ஜனாதிபதி ராஜினாமா செய்யும் வரை தொடர்ந்து நடைபெறும். சனிக்கிழமை நடைபெறும் போராட்டத்தில் நானும் கலந்து கொள்வேன். அன்றைய தினம் அனைத்து அரசியல் கட்சிகளும் போராட்டக்காரர்களுடன் கலந்து கொள்ள வேண்டும். கட்சித் தலைவர்கள் முன்னால் நடக்க வேண்டும். அவர்கள்தான் முதலில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை பிரயோகத்தை எதிர்கொள்ள வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.



