தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசபுத்திரன், நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து ஒன்று தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் படுகொலை தொடர்பான அனுதாப அமர்வில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் விசாரணைகளை கோரினார்.
மே 09 அன்று கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் உரையை மேற்கோள் காட்டிய பிரதமர், கட்டுக்கடங்காத கும்பல்களால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு எம்பி ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் கூறினார்.
”சாணக்கியனின உரையில் ”பாராளுமன்ற உறுப்பினர்கள் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை மற்றும் நாட்டுக்கு எதிரான ஏனைய கொள்கைகள் காரணமாக வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. மக்களுக்குத் துரோகம் இழைத்ததற்காகவே அவர்களது வீடுகள் தாக்கப்பட்டன என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்” என குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எவ்வாறு இவ்வாறான கருத்தை வெளியிட முடியும் என கேள்வி எழுப்பிய பிரதமர் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு தீ வைப்பதற்கும், சக எம்.பி.க்களின் கொலை மற்றும் தாக்குதலுக்கும் எம்.பி ஒப்புதல் அளிக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
‘பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அடுத்த வாரம் பாராளுமன்ற அமர்வுகள் முடிவடைவதற்கு முன்னர் மன்னிப்பு கோரி தனது அறிக்கையை வாபஸ் பெற வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால், அதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் விவாதித்து விசாரணைக் குழுவின் முன் வைத்து அறிக்கை சமர்ப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு” எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த போராட்டமொன்றில், ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னின்று அழைத்து சென்ற சாணக்கியன், பிள்ளையானின் அலுவலகத்தை முற்றுகையிட்டார், அது தேவையற்ற நடவடிக்கையென மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சி பிரமுகர்கள் ஏற்கனவே கட்சிக்குள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
அத்துடன், அண்மையில் எரிவாயு கோரி மட்டக்களப்பு பயனியர் வீதியில் போராடிய மக்களை, மாவட்டத்திலுள்ள அரசாங்க எம்.பிக்களின் வீடுகளிற்கு செல்லுங்கள் என திரும்பத் திரும்ப தூண்டிவிட்டபடியிருந்தார். எனினும், மக்கள் அதை கணக்கிலெடுக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.




