இலங்கை மின்சார சபை சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவு முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
நீண்டகாலமாக தாமதமாகிவரும் புதுப்பிக்கத்தக்க மின்திட்டங்களுக்கு விரைவான அனுமதி மற்றும் அமுலாக்கத்திற்கு வழி வகுக்கும் திருத்தங்களை அமைச்சர் விஜேசேகர நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
மின் துறை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் இன்றியமையாததாக இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை பொது மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதுடன் குறைந்த செலவில் மின்சாரம் வழங்க வழி வகுக்கும் பல புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்துவதில் மின்சாரசபை தொழிற்சங்கங்கள் நாசவேலை செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி மற்றும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதிகளில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு தொடர்பான அறிக்கையை தாம் சமர்ப்பித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கண்டுபிடிப்புகளின்படி, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மனித தலையீட்டை நிராகரிப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று குழு சுட்டிக்காட்டியுள்ளது, எனவே நிபுணர்களின் ஆதரவுடன் சம்பவங்களை விசாரிக்க பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.




