யுத்தத்தின் இறுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உகண்டாவில் உள்ள ராஜபக்ஷக்களின் தொழிற்சாலைகளில் அடிமைகளாக பயன்படுத்தப்படலாமென்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளார் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி.
தமிழக ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை தெரிவித்தார்.
‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனநாயக முறைப்படி நாட்டை ஆட்சி செய்வாராக இருந்தால், காணாமல் ஆக்கப்பட்டவர்களில் இப்போது அரசிடம் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். ஆனால் அவர்களின் குற்றப்பத்திரங்கள் கூட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல், தனித்துவமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்கிறார்கள். அதேபோலத்தான் எங்களது பிள்ளைகளையும் வைத்திருந்து சித்திரவதை செய்யலாம்.
யுத்தத்தில் அவர்கள் இறக்கவில்லை. யுத்தத்தின் பின் கையளிக்கப்பட்டவர்களிற்கு என்ன நடந்ததென்ற கேள்வி எம்மிடமுள்ளது.
அரசுஆட்டம் கண்டுகொண்டிருக்கும் நிலையில், அரசின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது. உகண்டா நாட்டில் 11 தொழிற்சாலைகள் உள்ளதாக முகநூலில் தகவல் பகிரப்பட்டு வருகிறது.
அப்படியான தொழிற்சாலைகளில், தமது வீடுகளில் எமது பிள்ளைகளை வேலைக்கு அமர்த்தி வைத்திருக்கலாம். சம்பளம் இல்லாத வேலைக்காரன்தானே. அப்படி செய்திருக்கலாம். தொடர்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காமல் வைத்திருக்கலாம்’ என்றார்.




