அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை ரூ. 230 ஆக இலங்கை மத்திய வங்கி நிர்ணயித்த பின்னர், பிரதான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் நேற்று முதல் மருந்தகங்களுக்கு மருந்து விநியோகிப்பதை நிறுத்த ஆலோசித்து வருவதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த தெரிவித்தார்.
மருந்து நிறுவனங்களும் இறக்குமதியாளர்களும் தங்களிடம் உள்ள இருப்புகளில் இருந்து மருந்தகங்களுக்கு விநியோகிப்பதை ஏற்கனவே நிறுத்திவிட்டதாக அவர் தெரிவித்தார்.
ரூபாய் மதிப்பீடு மாற்றமடைந்த பின்னர், அந்த மருந்து விற்பனையாளர்கள் லாபம் ஈட்ட முடியாது. பெரும்பாலான மருந்து வகைகள் மற்றும் பொருட்கள் கடனில் இறக்குமதி செய்யப்படுவதாக அவர் கூறினார்.
எனவே, குறைந்த விலையில் அவற்றை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யும் போது உற்பத்தியாளர்கள் அல்லது இறக்குமதியாளர்கள் பாரிய நட்டத்தை சந்திக்க நேரிடும் என கங்கந்த தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடியால், உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தேவையான மருந்துகளை உற்பத்தி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாத நிலையில் உள்ளனர். ஏனெனில், அவர்கள் இறக்குமதி செய்யும் சில மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டால், அவற்றை உள்ளூரில் விற்க முடியாது. சந்தையில் பெரும்பாலான மருந்துகள் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் விற்கப்படுகின்றன,” என்றார்.
சங்கத்தினர் நேற்று மருந்து பொருட்கள் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமணவுடன் கலந்துரையாடலை நடத்தியது. இராஜாங்க அமைச்சருடனான மற்றுமொரு சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, உள்ளூர் மருந்தகங்கள் மூலம் மருந்து விற்பனை விலையை உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்படும். எனினும், மருந்துகளின் விற்பனை விலையை உயர்த்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் மருந்து விநியோகத்தை நிறுத்தியுள்ளனர் என கூறினார்.
எனவே, அனைத்து மருந்தக உரிமையாளர்களையும் தங்கள் நுகர்வோருக்கு நிலைமையை விளக்கும் அதே வேளையில் தற்போதுள்ள மருந்துகளின் இருப்புக்களை சிக்கனமாக வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.



