பெண்ணின் வயிற்றிற்குள் மருந்து கட்டும் துண்டை வைத்து தைத்த விவகாரத்தில், சத்திரசிகிச்சை மேற்கொண்ட பெண் வைத்தியர் உள்ளிட்டவர்களை மன்றில் முன்னிலையாகுமாறு பருத்தித்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லியடியிலுள்ள ரூபின்ஸ் வைத்தியசாலையில், மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையிலேயே இந்த விபரீதம் நிகழ்ந்தது.
கரவெட்டி, யார்க்கரு பகுதியை சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (60) என்ற பெண், கர்ப்பப்பை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது கர்ப்பப்பையை அகற்றுமாறு வைத்திய ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, கடந்த டிசம்பர் 10ஆம் திகதி நெல்லியடி, முடக்காடு பகுதியிலுள்ள ரூபின்ஸ் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு சென்றிருந்தார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மகப்பேற்றியல் வைத்திய நிபுணர் வைத்தியர் வதனி தலைமையிலான குழுவினர் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டனர்.
அந்த சத்திரசிகிச்சையில் பங்கேற்ற பிற வைத்தியர்கள், தாதியர்கள் என பலரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிவ் பணிபுரிபவர்களே.
சிகிச்சையின் பின் வீடு திரும்பிய பெண், நோய்வாய்ப்பட்டுள்ளார். இதையடுத்து, பிரித்தானியாவிலுள்ள அவரது மகளும் நாடு திரும்பியுள்ளா’ர்.
அவரது உடல்நிலை மோசமடைந்திருந்ததால், 11ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அன்று இரவே அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் நேற்று பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது, உடலுக்குள் மருந்து கட்ட பயன்படுத்தப்படும் துண்டு காணப்பட்டது. 50 செ.மீ நீளமும், 10 செ.மீ அகலமும் கொண்ட அந்த துண்டு, அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக உடலுக்குள் வைத்து தைக்கப்பட்டுள்ளது.
அந்த துண்டு இருந்த பகுதியில் குடல் பழுதடைந்துள்ளது. அந்த துண்டினால் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாகவே, பெண் உயிரிழந்தார் என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, பிரேத பரிசோதனை முடிந்ததும், சட்டவைத்திய அதிகாரி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்திருந்தார்.
உறவினர்கள் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை மேற்கொண்ட போது, நெல்லியடி பொலிசார் அங்கு சென்று, இறுதிச்சடங்கை தாமதப்படுத்தும்படி அறிவித்தனர். அத்துடன், பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு விடயத்தை அறிவித்தனர்.
பருத்தித்துறை நீதிவான் நேற்று மாலை சடலத்தை பார்வையிட்டார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட வைத்திய அதிகாரி, ரூபின்ஸ் வைத்தியசாலை உரிமையாளரை இன்று மன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டது.
இன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட பின்னர், ரூபின்ஸ் தனியார் வைத்தியசாலைக்கு நீதிவான் சென்று பார்வையிட்டார்.
இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலை 3 இலட்சம் ரூபாவி;ற்கும் அதிகமான பணத்தை கட்டணமாக வசூலித்துள்ளது.




