முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு பிரதேசத்தில் தென்பகுதியில் இருந்து மீனவர்கள் வந்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானத்தை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தென்பகுதி மீனவர்களின் வருகை தொடர்பிலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் தாம் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மீனவ அமைப்பின் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இது தொடர்பில் நேரில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தந்து ஆராய்ந்து உரிய தீர்வுகளை பெற்றுத் தருவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.
கலந்துரையாடலில் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட்ட அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.




