வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து மரணமடைந்த கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததையடுத்து, அவரது சடலம் மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் வைத்தியசாலைக்கு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று (21) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா, மகாறம்பைப்குளம் பகுதியில் வசித்து வரும் 28 வயதுடைய இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் நேற்று இரவு (20) கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார். அவரது சடலம் பிசிஆர் சோதனைக்குட்பட்டதில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளதுடன், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் தாயார் வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து, வவுனியா மாவட்ட மேலதிக நீதிபதி சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தை மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து சடலம் யாழ் மவைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



