செல்போன் பேசியபடி நடந்து சென்று 60 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தவர், 17 மணி நேரமாக யார் கண்ணிலும் படாமல் உயிருக்குப் போராடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேரைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற நபர், செல்போனில் பேசிய படி நடந்து சென்றுள்ளார். அப்போது நிலத்தடி கிணறு உள்ளதை பார்க்காத அவர் தடுமாறி உள்ளே விழுந்தார்.
இதையடுத்து சுதாரித்து சந்திரசேகர், கிணற்றில் இருந்த மரங்களின் வேர்களைப் பிடித்துக் கொண்டு, தன்னைக் காப்பாற்றும்படி சத்தம் போட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை கிணற்றுக்குள் விழுந்தவர், யாரும் பார்க்காததால், இரவு முழுவதும் கிணற்றுக்குள்ளேயே கழித்துள்ளார்.

அதிகாலை அவ்வழியாக கால்நடை மேய்ச்சலுக்கு வந்தவர் பார்த்து, தீயணைப்புத்துறைக்குத் தகவல் கொடுக்கவே, 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டார்.



