கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகத்தைத் தாக்கி, ஒரு முன்னோடியில்லாத அளவிலான அழிவை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. அது நாம் வாழ்ந்த முறையை மாற்றியது. சர்வதேச எல்லைகள் மூடப்பட்டதால் சுற்றுலாத் துறையானது அதன் பாதிப்பை சந்தித்தது. உலகெங்கிலும் பயணம் செய்வது பலரின் நீண்டகால கனவாக மாறியது.
இந்தியாவிலும் பல நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா ஒரு புதிய வகை சுற்றுலாவை உருவாக்கியுள்ளது. வெளிநாட்டு தடுப்பூசி சுற்றுலாவுக்கான வளர்ந்து வரும் தேவை இந்தியாவில் வேகமாக வந்து கொண்டிருக்கிறது. அதற்கான இடமாக, ரஷ்யா மாறி வருகிறது.
துபாயை தளமாகக் கொண்ட பயண நிறுவனம் டெல்லியில் இருந்து மாஸ்கோவிற்கு 24 நாள் தொகுப்பு பயணத்தை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன் கீழ், அவர்கள் பயணிகளை ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்வார்கள். அவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி, சான்றிதழ்களையும் வழங்குவார்கள். பயணிகள் இரண்டு டோஸ்களுக்கு இடையில் இடைவெளியைக் கழிக்க 20 நாள் சுற்றுலா தொகுப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு ரூ 1.29 லட்சம் மற்றும் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான செலவு உட்பட அனைத்தையும் உள்ளடக்கும்.
இந்தியர்கள் இந்த சுற்றுலாவை மேற்கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்று பயண ஏற்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள், “மே 29 க்கு புறப்பட வேண்டிய தொகுதி சுமார் 28 பயணிகளுடன் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த தொகுதி ஜூன் 7 மற்றும் ஜூன் 15 ஆகிய தேதிகளில் புறப்படும்.” எனத் தெரிவித்துள்ளனர்.
“உங்களுக்கு தடுப்பூசி போடவில்லை என்றால், உங்கள் ஸ்புட்னிக் வி தடுப்பூசி அளவைப் பெற நாங்கள் உங்களை ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்வோம். 24 இரவு மற்றும் 25 பகல் கொண்ட சுற்றுலா தொகுப்பில் இரண்டு டோஸ் தடுப்பூசி, டெல்லி-மாஸ்கோ-டெல்லி விமான டிக்கெட்டுகள், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள 3 நட்சத்திர ஹோட்டலில் 4 நாட்கள் தங்குமிடம், மாஸ்கோவில் 3 நட்சத்திர ஹோட்டலில் 20 நாட்கள் தங்குமிடம், திரும்புவதற்கான டிக்கெட் ஆகியவை அடங்கும்.
மாஸ்கோ-செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-மாஸ்கோ மற்றும் 24 காலை உணவு மற்றும் இரவு உணவும் இதில் அடக்கம். ஒவ்வொரு ஸ்லாட்டிலும் 30 பயணிகளை அழைத்துச் செல்வோம். 10,000 ரூபாய் விசா கட்டணம் மட்டுமே தொகுப்பில் சேர்க்கப்படவில்லை.” என்று பயண நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
இந்த தொகுப்பு மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கைச் சுற்றியுள்ள உல்லாசப் பயணங்களையும், சுற்றுலாத் தளங்களுக்கான அனுமதி கட்டணங்களையும் உள்ளடக்கும்.
தற்போதைய கொரோனா சூழலில் இது சாத்தியம் தான என அறிய ரஷ்யா விசா மையத்திடம் அணுகியதில், ரஷ்யா விசா விண்ணப்ப மைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “இந்திய குடிமக்கள் தற்போது எந்த வகையான விசாவிற்கும் விண்ணப்பிக்கலாம். புதுதில்லியில் விசா மையம் செயல்பட்டு வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கான சர்வதேச விமானங்களைப் பொறுத்தவரை, மேக் மை ட்ரிப் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்போதே ரஷ்யாவுக்கு பயணிக்க முடியும். இப்போதைக்கு எந்த தடையும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தற்போதைய தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, விசா விதிகள் மற்றும் விமான நிலை சரி செய்யப்படவில்லை. இந்த நேரத்தில் எந்தவொரு வெளிநாட்டு பயணத்தையும் தொடங்குவதற்கு முன் இது குறித்து முழுமையாக சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறது.




