திருப்பதி மலையில் உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்து மறைந்தவர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தேவஸ்தான அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்தவரான சீனிவாசன் என்பவர், திருப்பதி கோவிலில் லட்டு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். கோவிலுக்கு வெளியே நடைபெறும் இறை கைங்கரியங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் அவர் தாமாக முன் சென்று உதவிகளை செய்வது வழக்கம். எனவே திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் அவர் ஏழுமலையான் கோவிலில் வேலை செய்யும் அர்ச்சகர் என்று கருதி வந்தனர்.

குடும்பம், குழந்தைகள் ஏதும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்த சீனிவவாச்சாரிக்கு திருப்பதியில் வீடு ஒன்றை தேவஸ்தானம் வாடகை அடிப்படையில் அனைவருக்கும் வழங்கியது போல் வழங்கியது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சீனிவாசன் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். எனவே அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை கையகப்படுத்த தேவஸ்தான அதிகாரிகள் நேற்று சென்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது அங்கு நான்கு இரும்பு பெட்டிகள் உட்பட பல்வேறு பொருட்கள் இருந்தன. இரும்பு பெட்டிகளை திறந்து பார்த்தபோது அவற்றில் கட்டுக்கட்டாக பத்து ரூபாய், இருபது ரூபாய், ஐம்பது ரூபாய் நோட்டுகள் என ஏராளமான அளவில் பணம் இருந்தது.
பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வந்த அவற்றை எண்ணிய போது சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பணம் எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.



