வலிகாமம் வடக்கில் பல தசாப்தங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை 18 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.
”அனுரவே எம்மை சொந்த நிலங்களில் வாழவிடு, எத்தனை நாள் தான் நாம் இரவல் இடங்களில் வாழ்வது” என்ற உருக்கமான கோசங்களுடன் முதியவர்கள், தாய்மார் எனப் பலரும் வீதியில் இறங்கித் தமது நீதிக்கான குரலை எழுப்பியுள்ளனர்.
1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமது சொந்த மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த மயிலிட்டி மக்கள், 36 ஆண்டுகளாக அகதிகளாகவும் இரவல் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
தமது பூர்வீக நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள நிலையில், தமது உரிமையை வென்றெடுப்பதற்காக மக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் முன்னெடுத்து வருகின்றனர்.
36 வருடகால அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, எந்தவித நிபந்தனையுமின்றி எமது சொந்தக் காணிகளில் மீளக் குடியேற அனுமதிக்க வேண்டும்.
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி (இல. 1810) முற்றாக ரத்து செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக மயிலிட்டிப் பகுதிக்குட்பட்ட J/248, J/251, J/255, மற்றும் J/246 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை விடுவிக்க வேண்டும்.
எத்தனை நாள் தான் நாம் இரவல் இடங்களில் வாழ்வது? எமது மண்ணில், எமது கடலில் நிம்மதியாக வாழும் உரிமையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எமக்கு பெற்றுத்தர வேண்டும்” எனப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வயோதிபத் தாய்மார் தெரிவித்தனர்.
நீண்டகாலமாக அகதி முகாம்களிலும், வாடகை வீடுகளிலும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துவரும் இம்மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு, தற்போதைய அரசாங்கம் விரைவாகச் செவிசாய்த்து உடனடித் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமா என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.




