இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப் புறாக்களைத் தமிழகப் பொலிஸார் இன்று காலை கைப்பற்றியுள்ளனர்.
தமிழகத்தின் இராமேஸ்வரம் ஊடாக கடல்வழியாக இலங்கைக்கு இப்புறாக்களைக் கடத்துவதற்காக, பாம்பன் பாலம் வழியாக வாகனத்தில் கொண்டு சென்றபோதே பொலிஸார் இவற்றை இடைமறித்துக் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவின் தமிழகக் கடற்கரையோரம் ஊடாக அண்மைக்காலமாக பெருமளவிலான பறவைகள் இலங்கைக்குக் கடத்தப்படுகின்றன என்று பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தீவிர வாகனச் சோதனையின்போதே இந்தப் புறாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்துடன் 120 ஜோடிப் புறாக்களையும் கைப்பற்றிய பொலிஸார், பறவைகளைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இந்தக் கடத்தல் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்துத் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




